Wednesday, August 22, 2007

மெரினா! - கவிதை



கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கரையில்,
கடல் - சாரலாய்
நீரைத் தெளித்துக் கொண்டிருந்தது

மனிதர்கள் கடக்காத பொழுது
நண்டுகள் சந்தோசமாய் - அலைகளோடு
விளையாடிக் கொண்டிருந்தன

பையன்கள் - வழக்கம்போல
தாவிக்குதித்து உற்சாகமாய்
குளித்துக்கொண்டிருந்தார்கள்
பெண்கள்
கால் நனைத்துக் கொண்டிருந்தார்கள்

சுண்டல் விற்கும் பையன்கள்
காதலர்களை - வழக்கம்போல
தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்
காதலன்கள் - தத்தம் காதலிகளை
தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்

கடலெனில் குளித்துவிடும்
வழக்கமெனக்கு.
மெரினா மட்டும் விதிவிலக்கு
கால் நனைப்பதோடு சரி

ஈவிரக்கமற்ற சுனாமி
கொலைகளுக்கு பிறகு - மனசில்லாமல்
இப்பொழுதெல்லாம்
கால் நனைப்பதையும்
நிறுத்திவிட்டேன்.

No comments: