Tuesday, November 2, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள் - சந்தோச விரும்பிகள்!

தோழியின் தோழிக்கு நிச்சயதார்த்தம். பெண்ணுக்கு பல வருடங்களாக மாப்பிள்ளை தேடி, அலைந்து, திரிந்து ஒருவழியாக கண்டுபிடித்து விட்டார்கள். வெள்ளை தோல், 6 அடி உயரம், தமிழ்ப் படங்களில்... லண்டன் ரிட்டனாக வரும் மாப்பிள்ளை போல இருந்தார். வெப் டிசைனராம். சம்பளம் 25000 என்றார்கள். வாழ்த்து சொல்லி வந்துவிட்டேன்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு திருமணம். 50 பவுன் வரதட்சணை. மாப்பிள்ளைக்கு தனியாக 10 பவுன். கார் கேட்டிருக்கிறாராம். பிறகு, வாங்கித் தருவதாக பெண்ணின் அப்பா வாக்கு தந்திருக்கிறார். தடபுடலாக திருமணம் நடந்தேறியது. மீண்டும், சாப்பிட்டு, வாழ்த்து தெரிவித்து, கை குலுக்கி வந்துவிட்டேன்.

நிற்க.

மேலே நடந்தது எல்லாம் ஆறு மாதங்களாகிவிட்டன. இரண்டு நாட்களுக்கு முன்பு, வேறு பேச்சிற்கிடையில்.. தோழியிடம் திருமண பெண்ணை நலம் விசாரித்தேன்.

கவலையோடு ஆரம்பித்தார். அந்த (லண்டன் ரிட்டர்ன்(!)) மாப்பிள்ளை வெப் டிசைனர் என்பது பொய்யாம். இந்த 6 மாதத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு போகவில்லையாம். தினசரி அலுவலகம் செல்வது டிப் டாப்பாக வெளியே கிளம்புகிறாராம். மாலையில் வருகிறாராம். தினம் ஒரு கந்து வட்டிக்காரன் வீடு தேடி வருகிறானாம். கந்து வட்டிக்காரன் வராத பொழுது... கிரடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் தந்த ஏதாவது ஒரு வங்கியிலிருந்து...பணம் கேட்டு ஆள் வருகிறார்களாம்.

ஆறு மாதங்களில் மாப்பிள்ளைக்கு போட்ட 10 பவுனை கொஞ்சமாக கொஞ்சமாக அடகோ அல்லது விற்றுவிட்டாராம். சில வீடுகள் வாடகைக்கு விட்டிருப்பதன் மூலம் வருகிற வருவாயை கொண்டு... வாழ்க்கையை நகர்த்துகிறார்களாம். அந்த வாடகையில் கூட பெரும்பகுதியை வட்டித்தான் கட்டுகிறார்களாம்.

வேலைக்கு போக சொன்னால்...என்னால் எங்கும் போய் வேலையெல்லாம் செய்யமுடியாது. நான் சொகுசா வாழ விரும்புகிறேன் என வாய்விட்டே சொல்கிறாராம். இப்பொழுது, தோழியிடம் "அப்பாவிடம் போய் 4 லட்சத்தை வாங்கி வா! நான் லண்டனில் போய் வாழப்போகிறேன்" என சொல்கிறாராம்.

நிற்க. தோழி சொன்ன மாப்பிள்ளையின் திருவிளையாடல்களை இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

தோழி சொல்வதை கேட்க, கேட்க சமூகத்தை நினைத்து அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருக்கிறது.

இந்த மனிதர்களை எப்படி வகைப்படுத்தலாம்? உழைக்கத் தயங்குவது, சிரமப்பட தயங்குவது, ஆனால் சந்தோசம் மட்டும் நிறைய வேண்டும். பலரிடம் அசிங்கப்பட கூட தயாராக இருக்கிறார். ஆனால், உழைக்க தயங்குகிறார் என்றால்.. இவர்கள் எல்லாம் பெருநகர சூழலில் விளைந்த ஒரு வகை மாதிரி (Pleasure loving people).

உழைப்பே இல்லாமல் சம்பாதிப்பது, எளிதாக பணம் சம்பாதிப்பது (EASY Money), கொஞ்சம் உழைப்பு - நிறைய சம்பாதிப்பது எல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் உலகமய சூழலில் ஒரு சிறிய கூட்டத்திற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது. ஆனால், இந்த மனநிலை பெருநகரத்தில் பலருக்கும் பரவியிருப்பதை பரவலாக பார்க்கமுடிகிறது.

சமூக கட்டமைப்பு மாறாமல்...இக்கும்பலை ஒழித்துக்கட்ட முடியாது. அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக பெருகி கொண்டு தான் இருப்பார்கள்.
****
அந்த பெண்ணின் நிலை - தோழியிடம் சொல்லி...அந்த மாப்பிள்ளையை விவாகரத்து செய்ய சொல்லி ஆலோசனை சொல்லியிருக்கிறேன்.
****

1 comment:

YOGA.S.Fr said...

தீர விசாரிக்க வேண்டாமா?ஆயிரம் காலத்துப் பயிரென்பார்களே?காதலித்து கல்யாணம் பாண்ணிக் கொள்வது மேலானது போலிருக்கிறதே?சன் டிவியில் வரும் "நாதஸ்வரம்" தொடர் மாப்பிள்ளை போலிருப்பாரோ?