Saturday, March 12, 2011

5 ஸ்டார் - ஒரு திரைப் பார்வை!


அதென்ன பார்வை? விமர்சனம் எழுதுகிற அளவுக்கு இன்னும் வளர்ந்துடலை! பார்வையும் கூர்மையடையலை! அப்புறம் எதுக்கு பில்டப்? அது தான் திரைப்பார்வை.

கடந்த வாரத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பினார்கள். மணிரத்னம் தயாரிப்பில் சுசிகணேசனின் இரண்டாம் படம். முதல் படம் விரும்புகிறேன்.

கதை எனப் பார்த்தால், இரு பெண்கள், மூவர் ஆண்கள். ஐவரும் நண்பர்கள். தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கிறார்கள். அதில் ஒருவனின் அப்பா மிகவும் கண்டிப்பானவர். விருப்பமில்லாமலேயே தன் தங்கையின் மகளை தன் மகனுக்கு மணமுடித்துவிடுகிறார். படிப்பு முடிந்ததும் ஊருக்கு திரும்பாமல், காணாமல் போய்விடுகிறார்.

சில ஆண்டுகள் நகர்கிறது. மீதி உள்ள இருவரில், ஒருவர் ரயில் பயணத்தில் சக பயணியாய் ஒரு பெண்ணைச் சந்திக்க, காதல் வயப்படுகிறார். தொடர்ச்சியான சந்திப்பில், தன் காதலை சொல்லி, திருமணம் குறித்து பேச, போகும் பொழுது தான் காணாமல் போன தன் நண்பரின் மனைவி என உண்மை தெரிகிறது.

தேடத் துவங்குகிறார்கள். இதற்கிடையில், மன உளைச்சலில் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். தொடர்ச்சியான தேடலில் கண்டுபிடிக்கிறார்கள். ஜெர்மனியில் மனைவி, குழந்தை என நண்பன் செட்டிலாகி இருக்கிறான். அழுது வடிவதை நிறுத்திவிட்டு, அவன் கட்டிய தாலியை தூக்கி போட்டுவிட்டு, புதிய வாழ்க்கை நோக்கி நகர்வதாக படம் முடியும்.

****
ஒரு வழியாக கதையை சொல்லிவிட்டேன். படத்தில் தந்தையாக வரும் (உதிரி பூக்கள்) விஜயனைத் தவிர, மற்ற அனைவரும் புதியவர்கள். இயக்குநர் சுசி கணேசனுக்கு இரண்டாம்படம் தான். இந்த இரண்டுமே நமக்கு தெரியாமல், படம் நகரும். பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் அறிவு உண்டு என பதிவு செய்யும் படம். வழக்கமான காதல், அடிதடி என இல்லாமல், நட்பு, கொஞ்சம் காதல், அப்பா, மகன் உறவு சிக்கல் என மனித உணர்வுகளை சொல்லும் படம்.

பிடித்த இடங்களில் ஒரு இடம்.

தன் மகனின் மேல் நிறைய அன்பு கொண்ட அப்பா, செல்லம் கொடுத்தால், பிள்ளை கெட்டுப்போவான் என அன்பை காட்டாமல், அதிகாரத்துடன், கண்டிப்புடன் வளர்க்கிறார். விருப்பமில்லாமல் திருமணத்தை முடித்து, ஊருக்கு வழியனுப்பும் பொழுது, "போய் வா! நீ புது அப்பாவை பார்ப்ப!" என்பார். அதற்கு பிறகு வாழ்வில் இருவரும் சந்திக்கவே மாட்டார்கள்.

என் வாழ்வில் கூட அப்படி நிகழ்ந்தது. அப்பாவிடம் குடிப்பழக்கம் இருந்தது. அப்பாவிடம் இருந்த ஒரே கெட்டபழக்கம் அதுதான். மற்றபடி பரமசாது. அவரிடம் பல நாள்கள் குடிப்பழக்கதை நிறுத்த சொல்லி, சண்டையிட்டிருக்கிறேன். பல நாள்கள் பேசாமல் இருந்திருக்கிறேன். ஒருநாள், திடீரென கடுமையான தலைவலி என்றார். கோமாவில் விழுந்தவர், மூளையில் ரத்தம் கசிந்து, நினைவு திரும்பாமலேயே இறந்துபோனார். நிறைய நாட்கள் உயிருடன் வாழ்வார் என்ற நம்பிக்கையில் சண்டையிட்டே வாழ்ந்துவிட்டோமே என எண்ணி நிறைய வருத்தப்பட்டிருக்கிறேன்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஒரு இடத்தில் சொல்வார். "அன்பு இருந்தால் நீ காட்ட வேண்டும். திறமை இருந்தால் நீ நிரூபித்தாக வேண்டும். உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தால், யார் அறிவார் அதை?" இந்த படம் இந்த வரிகளை அழுத்தந்திருத்தமாக மனதில் பதிந்த படம். பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

****

பின்குறிப்பு : விரும்புகிறேன் மற்றும் 5 ஸ்டார் படம் பாருங்கள். கந்தசாமியையும் பாருங்கள். எப்படி இருந்த மனுசன் இப்படி வீணாப் போயிட்டாரே! என நிச்சயம் வருந்துவீர்கள்.

No comments: