Saturday, March 19, 2011

நொந்தகுமாரனின் பக்கங்கள் - தானியங்கி!


சில மாதங்களுக்கு பிறகு வண்டியை சர்வீஸ்க்கு விட்டுவிட்டதால், இன்று பேருந்திற்காக காத்திருந்தேன். தானியங்கி கதவு திறந்து, ஏறியதும் மூடிக்கொண்டன. பயணிக்கையில், மக்கள் ஏறிய பிறகு ஒவ்வொரு முறை மூடும்பொழுதும், சில நினைவுகள் திறந்துகொண்டன.

***

சில ஆண்டுகளுக்கு முன்பு....

8.30 காலை. புள்ளதாய்ச்சி பெண் போல, சிரமப்பட்டு அந்த பேருந்து கொஞ்சம் சாய்ந்து, சாலையில் மிதந்து வந்தது. வேலைக்கு செல்லும் அவசரம். மக்கள் மொய்த்தார்கள். கிளம்பி வேகமெடுத்து ஓடிய பேருந்தில், தொங்கி கொண்டிருந்தவர்களில் ஒருவர் தடுமாறி விழுந்தார். கருணையே பார்க்காமல் பேருந்து ஏறி இறங்கியது. அடுத்த நாள் செய்தித்தாளில் விழுந்தவருக்கு இரண்டு குழந்தைகள் என படித்த பொழுது, பேருந்தைப் பார்த்து முதன் முதலில் பயம் வந்தது.

****

பக்கத்து வீட்டு கனத்த அம்மா. ஒவ்வொரு அமாவாசை அன்றும் வீட்டை விட்டு வெளியே வராமல், நாள் முழுவதும் சத்தம் போட்டு அழுது, தவிக்கும். பேருந்து விபத்தில் அவருடைய பையன் இறந்துபோய் இரண்டு வருடங்களாகின்றன. அவன் இறந்த நாள் அமாவாசை.

****

கடந்த காலங்களில் எவ்வளவு மனித உயிர்களை இப்படி கோரமாய் பலிவாங்கியிருக்கின்றன. எத்தனை குடும்பங்கள் தங்கள் சொந்தங்களை இழந்து தவித்திருக்கின்றன. சில ஹாலிவுட் படங்களில், பல பத்தாண்டுகளுக்கு முன்பே, தானியங்கி கதவு கொண்டு இயங்கும் பேருந்துகளை பார்க்கமுடிகிறது. அப்படியானால், இந்தியாவில் ஏன் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, அரசு தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகளை இயக்க ஆரம்பித்தது? அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் பயன்படுத்துவதால் தான் இத்தனை அலட்சியமா?

இன்றைக்கும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிவதும், விழுந்து சாவதும் தொடர்கின்றன. தானியங்கி கதவுகள் எப்பொழுது வரப்போகிறதோ? அடுத்த நூற்றாண்டிலா?

No comments: