Thursday, March 31, 2011

மனிதர்கள் 1 - பாண்டியம்மாள்!


அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்த பொழுது, அவள் பாவடை தாவணியில் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். தங்கை ஆறாவது படித்தாள். அப்பாவுக்கு பெயிண்டர் வேலை. தொடர்ச்சியாய் வேலையும் இருக்காது. அப்படியே வேலை இருந்தாலும், பொறுப்பாய் இருக்க தெரியாத மனுசன்.

குடும்பத்தை தன் தோளில் தாங்க வேண்டிய நெருக்கடி நிலை. படிப்பை விட்டுவிட்டு, வீட்டு வேலைக்கு போனாள். போன இடத்தில், அவளின் நிலை அறிந்து, படிப்பதற்கு உற்சாகம் தந்ததில், தபால் வழியில் இரண்டு ஆண்டுகளில் 12ம் வகுப்பு தேறினாள்.

இடையிடையே கற்றுத் தேர்ந்த டைப்பிங், டைப்பிஸ்டாக புரமோஷன் ஆனாள். தபால் வழியில் பி.ஏ. எழுத துவங்கினாள். சமையல், வீட்டு நிர்வாகம், டைப்பிஸ்ட் வேலை என்பதற்கு மத்தியில் அப்பா, தங்கை என இரு 'பிள்ளைகளையும்' கவனித்துக்கொண்டாள். இதற்கிடையில், 10 வரை படித்த தங்கைக்கு, படிப்பில் ஆர்வம் இல்லாது போக, அவளும் வேலைக்கு போக ஆரம்பித்தாள்.

வாழ்க்கை ஓட்டத்தில் தன் திருமணத்தை மறந்திருந்தாள். இப்படி சொல்லலாம். சாத்தியமில்லை என்பதால் மறந்திருந்தாள். பழகியவர்கள் தான் திருமணத்தைப் பற்றி பேசி, சங்கடப்படுத்தினார்கள். பேச வேண்டிய அப்பா திருமணத்தைப் பற்றி பேசவேயில்லை. தன் திருமண வாழ்க்கையாவது மாற்றத்தை தந்து விடாதா என்ற எண்ணத்தில், தன் திருமணத்திற்கு சிறுக சிறுக சேமித்தாள்.

மாப்பிள்ளை தேடி, வரதட்சணை பேரத்தில் சிக்கி, சுழன்று ஒருவழியாய் திருமணம் முடிந்த பொழுது, வயது 28 ஐ கடந்திருந்தது. வந்த மாப்பிள்ளையாவது சுமைகளை பகிர்ந்து, ஆறுதல் தருவான் என எதிர்பார்த்தால், கவனித்து பராமரிக்க வேண்டிய ஒரு இன்னொரு 'பிள்ளையாக' தான் வந்து சேர்ந்தான். பக்குவப்படுத்தி, ஒழுங்குப்படுத்தி, ஒரு நிதானத்துக்கு கொண்டு வருவதற்குள், புதிதாய் இரண்டு குழந்தைகள் வந்திருந்தார்கள்.

இதற்கிடையில், தன் நகையை தங்கைக்கு போட்டு, பொறுப்பாய் திருமணம் முடித்து வைத்தால், தங்கை அம்மாவிடம் கூடுதல் வரதட்சணைக்கு சண்டையிடும் பெண் போல சண்டையிட்டாள். எதார்த்த நிலை புரியாமல், தங்கை இப்படி நடந்து கொள்கிறாளே என சொல்லி, சொல்லி புலம்ப மட்டும் தான் அவளால் முடிந்தது.

இப்பொழுது ஒரு சிறிய ஜெராக்ஸ் மற்றும் டைப்பிங் கடையை உருவாக்கி, பராமரித்து வருகிறாள். நாற்பதின் துவக்கத்தில் இருப்பதால், முதுகு வலியும், கால் வலியும் பாடாய் படுத்துவாய் புலம்புகிறாள். அவளுடைய அப்பா கடந்த ஆறு மாதங்களாக காசநோயினால் அவதிப்பட்டு, அவளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு, ஒருவழியாக கண்மூடினார்.

அவளுடைய போராட்ட வாழ்வில், கடவுள் நம்பிக்கையை 80% தொலைத்திருந்தாள். நட்பாய் பழகியதில் மீதி 20%த்தை என் அக்கா வாங்கிவிட்டாள். எப்பொழுதாவது நினைப்பதுண்டு 'வாங்கி இருக்க கூடாதோ' என!

கடந்த மாதம், அப்பா இறந்த துக்கம் விசாரித்து விட்டு, "பசங்களை (இரண்டு பெண் குழந்தைகள்) அழைத்து கொண்டு, கோடை விடுமுறையில் நாலு நாள் சென்னை வாருங்கள்" என அக்கா சொன்னதை சொன்னேன். "குழந்தைகள் வளர்ந்துவிட்டால், சிரமம் இருக்காது. எளிதாய் வந்துவிடலாம்" என்றார். சொல்லும் பொழுது, அவள் கண்களில் சில நம்பிக்கை தரும் ஏணிகளும், அதைவிட பெரிய பாம்புகளும் தெரிந்தன.

தன் வாழ்வில் தன்னை தாங்குகிற ஒரு தோள் தேடி அலைந்தாள். ஆனால், 'பிள்ளைகளாக' தான் வந்து கொண்டே இருந்தார்கள். புதிய பிள்ளைகளும் இனியும் வந்து கொண்டே இருப்பார்கள்.

சோர்வாய், தளர்வாய் இருக்கும் பொழுது இவரைத் தான் நினைத்து கொள்கிறேன். பெரிதாய் தோன்றிய பிரச்சனை எல்லாம் மிகச் சிறியதாய் தெரியும்.

****

2 comments:

நிலவு said...

எவ்வளவு பொறுமையான மனிதர்கள். கண் கலங்குகிறது

நிலவு said...

எவ்வளவு பொறுமையான மனிதர்கள். கண் கலங்குகிறது