Saturday, October 29, 2011

உடான் - இந்திப்படம் - ஒரு திரைப்பார்வை!



வலையுலகில் வேலாயுதமும், ஏழாம் அறிவும் எட்டுத்திசையிலும் சுழற்றி, சுழற்றி விஜய் வில்லனின் அடியாட்களை அடிப்பது போல வாசகர்களை அடித்து நொறுக்கி வதைத்து கொண்டிருக்கின்றன. வேலாயுதம் படத்தின் ஒன் லைனே சகிக்கமுடியாததாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்து, சூப்பர் என பலரும் விமர்சனம் வேறு எழுதுகிறார்கள் என்றால்! ம்ஹூம். நிறைய ரசிகர்கள் பதிவுலகில் இருப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

கடந்த வருடம் தமிழ்மணம் நடத்திய விருது போட்டியில், திரைப்பட விமர்சனத்தில் இரண்டாம் பரிசு பெற்ற 'உடான்' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு தகுதியான படம் என்பதால் இந்த பகிர்வு!

*****

'உடான்' என்றால் விமானம் என பொருள்படும் என்கிறார்கள். கனவு என்றும் பொருள்படுமாம்!

கதை எனப்பார்த்தால், இந்தியாவிலேயே பணக்காரப்பள்ளிகளில் ஒன்றான சிம்லாவில் இருக்கும் ஒரு பள்ளியில், ரோஹன் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கிறான். வழக்கமாக செய்யும் சேட்டைகளில் கொஞ்சம் எல்லை மீறிப்போக பள்ளியிலிருந்து அவனையும், அவனுடைய நண்பர்கள் மூவரையும் அனுப்புகிறார்கள்.

அப்பா பயங்கர கோபத்துடன் மகனை சொந்த ஊரான ஜம்ஜெட்பூருக்கு அழைத்துவருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட பார்க்க வராத அப்பாவின் மீது மகனுக்கு பயங்கர கோபம்.

****

வீட்டில் நிலைமை ரோஹனுக்கு சிறை போலிருக்கிறது. அப்பா ராணுவக்கட்டுபாடுகள் விதிக்கிறார். "சார்" என்று தான் தன்னை அழைக்கவேண்டும் என மிரட்டுகிறார். எல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது. அதைவிட அதிர்ச்சி, ஆறு வயதில் ஜிம்மி என சகோதரன் புதிதாக வீட்டில் இருக்கிறான். அது இன்னும் அதிர்ச்சியை தருகிறது. ரோஹனின் அம்மா ஏற்கனவே இல்லை. இந்த எட்டு ஆண்டுகளில், அப்பா வேறு ஒரு பெண்ணை மணந்து, குழந்தை பிறந்த பிறகு, ஜிம்மியின் அம்மா பிரிந்தும் போயிருக்கிறார்.

மேற்படிப்பில் ரோஹனுக்கு கதை, கவிதைகளில் ஆர்வம் அதிகம். இலக்கியம் படிக்க ஆசைப்படுகிறான். அப்பாவோ, தன் இரும்பு தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டே, இன்ஜினியரிங் படி என கட்டளையிடுகிறார். வேறு வழியில்லாமல், இன்ஜினியரிங் படிக்கிறான். எல்லா பாடங்களிலும் வேண்டுமென்றே தோல்வி அடைகிறான். இதற்கிடையில் ரோஹனுக்கும், ஜிம்மிக்கும் நெருக்கம் ஏற்படுகிறது.

அப்பாவிற்கும், மகனுக்குமான முரண்பாடுகள் நாளாக நாளாக வெடிக்கின்றன. மீண்டும் ஒரு கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக முடிவெடுக்கிறார். ஜிம்மியை ரோஹனைப்போலவே போர்டு பள்ளியில் சேர்த்துவிடபோவதாகவும் சொல்கிறார். வீட்டை விட்டு வெளியேறி, தன் நண்பர்கள் நடத்தும், உணவகத்தில் வேலை செய்து, தனக்கு பிடித்த வாழ்வை தொடரலாம் என ரோஹன் முடிவெடுக்கிறான். வெளியேறியும் விடுகிறான். இறுதி நேரத்தில், தன்னுடன் தன் தம்பியை விட்டுவிட்டால், தன்னைப் போலவே அவனும் பாதிக்கப்படுவான் என நினைத்து, அவனையும் அழைத்துக்கொண்டு கிளம்புகிறான். ரோஹன் எழுதிய கடிதத்தை அவனின் அப்பா படிப்பதோடு படம் முடிவடைகிறது!

****

சில படங்கள் வெகு நாள்களுக்கு மனதில் தங்கும். அப்படிப்பட்ட படங்களில் இந்த படமும் ஒன்று. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மிக குறைவு. ரோஹன், அவனின் தம்பியாக வரும் ஜிம்மி, அப்பா, சித்தப்பா என நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறந்த கதை, திரைக்கதை, சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை கதாப்பாத்திரம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு என ஏழு பிரிவுகளில் பிலிம்பேர் விருது பெற்றிருக்கிறது. பார்க்கவேண்டிய படம். நிச்சயம் பாருங்கள்.

****

திரைப்படங்கள் யதார்த்த வாழ்வியலை, அதன் எழும் சிக்கல்களை, தீர்வுகளை பேசுவதாக இருக்க வேண்டும். இந்த படம் அப்பா மகன் உறவு சிக்கலை யதார்த்தமாக பேசுகிறது. இந்திய சமூகத்தில், நம் குடும்பங்கள் தந்தை வழி சமூகமாக இருக்கிறது. தந்தை சொல்வது தான் வேதவாக்கு. அப்பா சொல்வதை எதிர்ப்பில்லாமல் மொத்த குடும்பமும் கேட்டு நடக்கவேண்டும். தந்தைக்கும் தாயுக்குமான உறவே சமத்துவம் இல்லாமல் தான் இருப்பதால், பிள்ளைகளின் நிலையும் அதுவே!

அம்மாவை, அப்பாவை தாங்குகிற மிகை உணர்ச்சி கொண்ட செண்டிமெண்ட படங்கள் தான் இங்கு அதிகம். அதிகமாய் வசூலையும் கடந்த காலத்தில் தந்திருக்கின்றன. தமிழில் தந்தை மகன் உறவு சிக்கல் குறித்த பேசிய படங்கள் மிக குறைவு. வெயில், துள்ளி திரிந்த காலம் என சொற்பமான சில படங்கள் தான்!

****

கீழே உள்ள சுட்டியில் உள்ள விமர்சனம் தான் இரண்டாம் பரிசு பெற்றது. விரிவாகவும், உணர்வுபூர்வமாகவும் எழுதியுள்ளார்.

உடான் - விமானம் - காத்தாடி - ஒரு கனவு! - அன்பே சிவம்!

2 comments:

வல்லிசிம்ஹன் said...

உடான் முடிந்தால் பார்க்கிறேன் குமரன்.
நட்சத்திர வாரம் முடிகிறது. அழகாக ப் பதிவு இட்டுள்ளிர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

குமரன் said...

வல்லி அம்மா அவர்களுக்கு,

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நன்றி பதிவிற்காக இப்பொழுது தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.