Friday, May 4, 2012

வழக்கு எண் : 18/9

படம் வந்த அன்றைக்கே படத்திற்கு போய், பல மாதங்களாகிவிட்டது.  கடைசியாய் இராஜபாட்டையில் சிக்கி சின்னபின்னாமாகி வெளியே வந்தேன்.  இப்பொழுதெல்லாம், விமர்சனம் படிக்காமல் எந்த படமும் பார்ப்பதில்லை.  பதிவர்கள் தான் உடனுக்குடன் படம் பார்த்து, விமர்சனம் எழுதி,  பல மோசமான படங்களிலிருந்து காப்பாற்றுகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.  நேற்று இந்த படத்திற்கு நண்பனுடன் போனேன்.

****

இயக்குநர் பாலாஜி சக்திவேலை எனக்கு பிடிக்கும்.  அதிமுக கருங்காலிகள், தர்மபுரி அருகே பஸ் எரித்து மூன்று மாணவிகளை உயிரோடு கொளுத்திய கொடுமையான நிகழ்வை 'கல்லூரி' என படம் எடுத்தார்.  சரியாக போகவில்லை.  தமிழகத்தின் மிக முக்கியமான நிகழ்வை தான் சரியாக கையாளவில்லை.  வேறு யாராவது எடுத்திருந்தால் சரியாக கையாண்டிருப்பார்கள் என உண்மையிலேயே நேர்காணலில் வருந்தினார்.  தமிழ்ப்பட நச்சு சூழலில் அந்த கதையை யாரும் தொட்டிருக்கவே மாட்டார்கள் என்பது தனிக்கதை.  இருப்பினும் ஒரு படைப்பாளிக்குரிய நேர்மை அவருடைய பேச்சில் இருந்தது.

இடைக்காலங்களில் வேறு படங்கள் எடுக்காமல், ஷங்கர் எடுத்த படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக வேலை பார்த்துகொண்டிருந்தார்.  இங்கு பல புகழ்பெற்ற இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பு நிர்வாகியாக இருக்கவேண்டியவர்கள் தான்.  இந்த மனுஷன் கை சுத்தமாக நேர்மையாக இருந்த காரணத்தினாலேயே, தயாரிப்பு நிர்வாகியாக முடங்கிபோயிருந்தார்.

****

இந்த படம் பல சமூக அவலங்களை, நிகழ்வுகளை தொட்டுச் செல்கிறது.

வட்டிக்கு வாங்கி விவசாயத்தில் போட்டு, விளையாமல் நொடித்துப்போய் தனது கிட்னியை விற்று தற்காலிகமாக நெருக்கடியை தீர்ப்பதா? அல்லது தற்கொலை செய்து செத்துப்போவதா? என்கிற இந்திய விவசாயின் அவலநிலை.

தொழில்கள் எல்லாம் நொடித்து கிடக்க, பெற்றோர்கள் வேலையின்றி அலைந்து திரியும் பொழுது, படிக்கிற வயதில் வேலைக்கு செல்லும் சிறுவர்களின் அவலநிலை.

சுதந்திரம் அடைந்து (!) 60 ஆண்டுகளுக்கும் மேலாகி இந்த நாட்டில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படாத அவலநிலை!

கூத்துக்கலைகள்  அழிந்து,  கலைஞர்கள் எல்லாம் கூலிகளாக மாறிக்கொண்டிருக்கும் நிலை!

அதிகாரவர்க்கமும், பணம் படைத்த வர்க்கமும் எப்படி எளியவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்துகொள்கிறார்கள்? என்பதை படம் அழுத்தமாக சொல்லியிருக்கிறது.  நமது முதலமைச்சர் நித்தமும் புகழ்கிற கண் துஞ்சாமல் மக்களுக்கு 'சேவை' செய்யும் காவல்துறையை பற்றி நன்றாகவே பேசியிருக்கிறது.

படத்தில் இன்னும் பிடித்த விசயங்கள்.  தனியாக பாடல்கள் இல்லை.  சண்டைகள் இல்லை. இரண்டு மணி நேரம்தான் படமே!

நம் பகுதியில் நடக்கும் யதார்த்த கதையாய் விரிகிறது.  படத்தில் வருகின்ற யாரும் பார்த்த முகங்களே இல்லை; எல்லோருமே புதியவர்கள்.  இயல்பாக வலம் வருகிறார்கள்.

எளியவர்கள் வாழ்க்கையில் சிறு வயதிலிருந்தே பல்வேறு துன்ப துயரங்களை பார்த்து பக்குவப்பட்டு வளர்ந்தவர்கள். அநீதிகளுக்கு எதிராக சகித்துக்கொண்டு வாழமாட்டார்கள்.  எதிர்த்துப் போராடுவார்கள் என்பதை சொல்லும் இறுதிக்காட்சி  அருமை!

படத்தின் இறுதி பிரேமாக சிதைந்த ஓவியமாக அந்த பெண்ணை காட்டும் பொழுது, குரூரமான சமூகத்தை நினைத்தால் மனதில் பகீரென்று இருக்கிறது. நாம் தொடர்ந்து போராட வேண்டியது நிறைய உள்ளது என்பதை உணரமுடிகிறது.

***

படத்தில் நான் உணர்ந்த குறைகள் :

அந்த மத்திய தரவர்க்கத்துப் மாணவி காவல் நிலையத்தில் தானாக முன்வந்து நிகழ்வை சொல்வது! காவல் நிலையங்கள் எல்லாம் கேவலமாக இருக்கும் பொழுது, இப்படி நிகழ்வது சாத்தியமில்லாதது!  நிகழ்வு நடந்த பொழுது, அந்த பெண்ணும் உடனிருப்பதால்,  அந்த பெண்ணை விசாரணை செய்யும் பொழுது, சொல்வதாக வைத்திருக்கலாம்.

இறுதியில் அப்பாவி இளைஞன் வெளியே வந்து, உண்மைக் குற்றவாளி தண்டிக்கப்படுவது போல போகிற போக்கில் சொல்லப்படுகிறது.  காசுக்கு விலைபோகும் காவல்துறை, நீதித்துறை உள்ள பொழுது, உண்மை குற்றவாளி தண்டிக்கப்படுவது அவ்வளவு எளிதா என்ன!  பல்வேறு அமைப்புகள், மக்கள் போராட்டகளுக்கு பிறகு கொஞ்சம் சாத்தியம்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

2 comments:

Unknown said...

வழக்கு எண் :18/9 படத்தை பாராட்டி எழுதிய எல்லா பத்திரிகை நண்பர்களுக்கும் , மீடியா நண்பர்களுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி . - லிங்குசாமி

Unknown said...

வழக்கு எண் :18/9 படத்தை பாராட்டி எழுதிய எல்லா பத்திரிகை நண்பர்களுக்கும் , மீடியா நண்பர்களுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி . - லிங்குசாமி