Sunday, June 17, 2012

மனம் கொத்திப் பறவை!

சாரு ஆனந்த விகடனில் தொடர் எழுதிய பொழுது வைத்த பெயர்.  தமிழ் இயக்குநர்களுக்கு, கதை விசயத்தில் கற்பனை வறட்சி போலவே, படத்திற்கு பெயர் வைப்பதிலும் கற்பனை வறட்சி தான்.  இலக்கியவாதிகளை கேட்டால் நல்ல தமிழ் பெயர்களை தருவார்கள் இந்த பெயர் உதாரணம்.

படத்தைப் பற்றி பல பதிவர்களும் எழுதியிருக்கிறார்கள். படமும் மிக லேசான படம் தான். அதனால் சுருக்கமாய் என் கருத்தை பகிர்கிறேன்.

****

கதை எனப் பார்த்தால்...

நாயகனும், நாயகனும் கிராமத்தில் எதிரெதிர் வீடுகளில் வசிப்பவர்கள். ஒரே வயது. இணைந்தும் படித்தவர்கள். நாயகன் காதலிக்கிறார். . நாயகியின் வீடு சாதிப்பெருமை பேசி, அடிதடிகளில் ஈடுபடும் முரட்டு குடும்பம். அதனால் நாயகியோ எந்தவித ரியாக்சனும் காட்டாமல் இருக்கிறார்.

ஆனால், அந்த பெண் தன்னை காதலிப்பது போல தன் நண்பர்களிடம் அதிகமாய் பீலா விடுகிறார்.  இதற்கிடையில் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.  நாயகன் கெஞ்சுகிறார். தன் குடும்ப மானம் பெரிது.  வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள் என நாயகி மறுத்துவிடுகிறார்.

பெண்ணின் நிலை அறியாமல், திருமணத்திற்கு முதல் நாள், காதலர்களை இணைத்து வைக்கிறேன் பேர்வழி என சோகத்தில் குடியில் மயங்கி கிடக்கும் (ஒருதலை!) காதலனை அள்ளி காரில் போட்டு, பெண்ணையும் மயக்கத்தில் ஆழ்த்தி கடத்துகிறார்கள்.  இடைவேளை. திருமணம் தடைபடுகிறது. பெண்ணின் குடும்பத்து ஆட்கள் வெறியோடு துரத்துகிறார்கள். இறுதியில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை திரையிலோ, திருட்டு டிவிடியிலோ அல்லது இன்னும் மூன்று மாதங்களில் சின்னத்திரைக்கு வரும் பொழுதோ பார்த்துக்கொள்ளுங்கள்.

****

இயக்குநர் எழிலை எனக்கு பிடிக்கும்.  அவருக்கு இது ஆறாவது படம்.  முதல் படம் துள்ளாத மனமும் துள்ளும். இதற்கு முந்தைய படம் 'தீபாவளி' . எழிலின் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்.  இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை.  ஆனால், படத்தை பார்க்கும் பொழுது, திரைக்கதை, இயக்கம் எல்லாம் ஒரு புதிய இயக்குநர் எடுத்தது போல இருக்கிறது. அமெச்சூர்தனம் தெரிகிறது.  பட்ஜெட் படம். எழிலும் தயாரிப்பாளர்களில் ஒருவராம். 

காதல், காமெடி என படம் நகருகிறது.  நாயகன், நாயகியை விட, சிங்கம்புலி போன்ற துணை நடிகர்கள் கலகலப்பாய் நகர்த்துகிறார்கள். பாடல்களும் தேறுகிறது. இடைவேளைக்கு முன் இருந்த ஒரு கலகலப்பு, இடைவேளைக்கு பின் இல்லை. ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பை விட இந்த படம் ஓகே. ஓகே. திரையரங்குகளில் இப்போதைக்கு பார்ப்பதற்கு படமே இல்லை. அதனால், இன்னும் சில நாள்கள் திரையரங்கில் தாங்கும். 

****

No comments: