Sunday, November 4, 2012

உப்புமா!

சமையல் குறிப்புகள் எழுதி வெகுநாட்களாயிற்று.  21ம் நூற்றாண்டிலும் பெண்கள் சமையல் குறிப்புகள் எழுதினால், அது ரெம்ப பழைய விசயம். சுவாரசியமில்லாத ஒன்று.( : (  ஆண்கள் சமையல் குறிப்புகள் எழுதுவது தான் இதில் புதுசு! :) இந்த வரலாற்று பின்புலத்தில் இந்த பதிவு மிக முக்கியமானது.

எழுதும் பொழுது பக்தர்கள் பிள்ளையார் சுழி போடுவார்களே! அது போல நாம் உப்புமாலிருந்து ஆரம்பிக்கலாம்.  சமையலில் எளிதாகவும், விரைவாகவும் செய்ய முடிவது உப்புமா என்கிறார்கள் சமையல் வல்லுநர்கள்.  ஆனால், புதிதாக செய்பவர்களுக்கு உப்புமா கூட கொஞ்சம் சிரமம் தான். :)

****

தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, ரவை மற்றும் கொஞ்சம் ரசனை, கொஞ்சம் பொறுமை.


ஒரு ஆளுக்கான அளவை குறிப்பிடுகிறேன். அதை நபர்களுக்கு தகுந்தவாறு நீங்கள் அதிகப்படுத்தி கொள்ளலாம்.

ஒரு பெரிய வெங்காயத்தில் பாதியை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாய் அல்லது ஒரு காய்ஞ்ச மிளகாய்.  ப.மி. என்றால் இரண்டாக கீறி வைத்துக்கொள்ளுங்கள்.

3/4 டம்ளர் ரவையை எடுத்து ஒரு சட்டியில் அதன் நிறம் கொஞ்சம் பொன்னிறமாகி மாறும் வரை வறுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது ஆக்சன்.  ஒரு வடை சட்டியை ஈரம் இல்லாமல் துடைத்துகொண்டு, அடுப்பில் வையுங்கள். சட்டி சூடானதும், தேவையான எண்ணெயை ஊற்றி, சூடானதும், கடுகை போடவேண்டும்.  கோபமாய் இருப்பவர்கள் வெடிப்பார்கள் அல்லவா! அது போல கடுகு வெடிக்கும். அதனோடு கருவேப்பிலையை போடுங்கள்.

பிறகு தயாராய் வெட்டி வைத்திருக்கிற வெங்காயம், மிளகாயை போட்டு வெங்காயத்தின் நிறம் கொஞ்சம் மாறும் வரை (பச்சை வாடை போகும் வரை) வதக்குங்கள்.

1 1/2 டம்ளர் தண்ணீரை ஊற்றவேண்டும்.  தேவையான அளவு உப்பு போட்டுகொள்ளுங்கள்.  தண்ணீர் கொதிக்கும் பொழுது, வறுத்து வைத்திருக்கிற ரவையை அதில் போட்டு, கிண்டுங்கள்.

தண்ணீர் வற்றியதும், அடுப்பை அணையுங்கள்.  சூடான, சுவையான ரவை உப்புமா தயார்.

தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சர்க்கரை நன்றாக இருக்கும்.

****
உப்புமா செய்முறையில் ஒரு சந்தேகம்.  இறுதியில் ரவையை போட்டு கிண்டும் பொழுது, கொஞ்சம் ரவை வேகும் அளவுக்கு அதில் கொஞ்சம் தண்ணீர் இருக்கவேண்டுமா? அப்பொழுது சுவையாக இருக்குமா?  அறிந்தவர்கள் பகிருங்கள்.


****
எனக்கு சுடுதண்ணீர் வைக்ககூட தெரியாது. சமைக்க தெரியாது. ஆனால், ருசியாக தான் சாப்பிடுவேன், பல குறைகளை பட்டியலிடுவேன் என்பது ஒரு நகை முரண்.  சமையல் அறையில் யாரையோ வதக்கி தான், ஒவ்வொரு வேளையும் ருசியாக சாப்பிடுகிறோம் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

****

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி...

மொட்டைபையன் said...

மிகவும் அருமையான உணவு...திடீர் என்று வரும் விருந்தாளிகளுக்கானது it is fast food