Saturday, December 15, 2012

22 பெண் கோட்டயம் - மலையாளம்

சில நாட்களுக்கு முன்பு இந்த (22 Female Kottayam) படத்தைப் பற்றி பதிவர் இருவர் எழுதி இருந்தார்கள்.  அப்பொழுதே பார்க்கவேண்டும் என நினைத்தேன்.  சில வருடங்களாக வர்த்தக ரீதியான தமிழ் படங்களின் தாக்குதலால் மலையாளத்தில் தரமான படங்கள் வருவது குறைந்திருந்தது.  இந்த படம் பார்க்ககூடிய படம்.

****

கதை எனப் பார்த்தால்... (வெளிவந்து பல மாதங்கள் ஆனதால், கதையை சொல்லலாம் தப்பில்லை!)

பழிவாங்கும் கதை தான்.  26 வயது கொண்ட கேரளாவை சேர்ந்த நாயகி பெங்களூருவில் ஒரு பிரபல மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறாள்.  அம்மா, அப்பா இல்லை.  தங்கை கொச்சியில் படிக்கிறாள்.

நாயகிக்கு கனடாவில் பணி செய்ய விருப்பம்.  விசாவிற்காக ஒரு ஏஜென்ஸிடம் தொடர்பு கொள்கிறாள். அங்கு வேலை செய்யும் நாயகன் பழக்கமாகிறான்.  பிறகு காதலாக மாறுகிறது.  சேர்ந்து வாழலாம் என வாழ்கிறார்கள்.

இதற்கிடையில் பப்பில் ஒரு பெரிய மனிதனின் மகனிடம் தகராறு ஏற்படுகிறது.  பிரச்சனை எழ, முதலாளி வீட்டில் தலைமறைவாய் இருக்கிறான்.  நாயகிக்கு ஆறுதல் சொல்ல வந்த முதலாளி பாலியல் பலாத்காரம் செய்கிறார்ன்

மீண்டும் உடல் நலம் தேறி வரும் வேளையில், மீண்டும் நாயகன் இல்லாத பொழுது, மீண்டும் முதலாளி பலாத்காரன் செய்கிறான்.  'இனி கனடாவில் வேலை செய்ய போவதில்லை.  அவனை விடப்போவதில்லை!' என்கிறாள்.

மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் நாயகனும் முதலாளியும் திட்டமிட்டே செய்கிறார்கள்.  அவளை போதைப் பொருள் கடத்தியதாய், போலீசில் மாட்டிவிட்டு சிறையில் தள்ளுகிறார்கள். குமுறி குமுறி அழுகிறாள்.

சிறை புதிய சூழல். வித்தியாசமான மனிதர்கள். அவர்களின் பழக்கம், அவளை தைரியம் பெற்ற புதிய ஆளாக, ஜாமீனில் வெளிவருகிறாள்.

சிறையில் பழக்கமான உதவ முதலாளியை பாம்பை கடிக்க வைத்து கொல்கிறாள்.  நாயகனை சந்தித்து மயக்கத்தில் ஆழ்த்தி ஆணுறுப்பை நீக்கிவிடுகிறாள். அவன் செய்த தவறு வாழ்நாளுக்கும் மறக்ககூடாது என்பதற்காக, அருகில் இருந்து கவனித்து உயிரை காப்பாற்றிவிடுகிறாள்.

நாயகி வெளிநாடு செல்ல முடிவெடுப்பதோடு படம் முடிவடைகிறது.

****

அழுது, அழுது நெக்குறுகி சிறைக்கு செல்லும் நாயகி சிறை மனுசிகளின் கதையும், பழக்கமும், வாழ்க்கையும் மனதை திடப்படுத்துகிறது. முதலில் அழுகை நின்றுவிடுகிறது. நாயகனும், முதலாளியும் தன்னை மட்டுமல்ல, இன்னும் பலரையும் சீரழிக்கிறார்கள் என அறிகிறாள்.  பழிவாங்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறுகிறது.   ஒரு மனிதனின் சிந்தனையில் புறநிலை எவ்வளவு தாக்கம் செலுத்தும் என்பதை இயல்பாக சொல்கிறார்கள்.  தமிழ்படங்களில் பலகாலம் படுகோழையாய் இருக்கும் ஒருவன் தன் உறவில் ஒன்று கொல்லப்படும் பொழுது உடனே வீறுகொண்டு எழும் பொழுது, அபத்தமாக இருக்கும்.

படத்தில் இறுதியில் நாயகனை பார்த்து, "உண்மையான காதலை விரும்பினால், என்னை வந்து சேர். ஏற்றுக்கொள்கிறேன்!" என்பதாக பேசுகிறாள்.அவன் பெண்களை ஏமாற்றுவதையே தொழிலாக கொண்டவன். அவனிடம்  இப்படி பேசுவது அபத்தமாக இருக்க்கிறது. 

மற்றபடி 'ஏக் ஹசீனா தி'  மற்றும் இரண்டு படங்களை எழுத்து போடும் பொழுது, நினைவுகூறுகிறார்கள். தமிழ்ப்பட இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பண்பு இது! பெருநகர கலாச்சார பின்னணியில் சொல்லப்பட்ட படம். அனைத்து நடிகர்களின் அளவான நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என படத்திற்கு அழகு சேர்க்கிறது.  நல்ல தரமான ப்ரிண்டில் ரூ. 30க்கு சந்தையில் கிடைக்கிறது. பாருங்கள்.

நாயகி ரிமா நம்மூர் பிரியாமணியை நினைவுப்படுத்துகிறார்..  நாயகன் 'காதலுக்கு மரியாதை' இயக்குநர் பாசிலின் மகனாம். எங்கும் திரையுலகை வாரிசுகள் ஆக்ரமிக்கிறார்கள். ஏப்ரல் 2012ல் வெளிவந்தபடம்.

****

No comments: