Monday, December 17, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!

நெடுநாட்களுக்கு பிறகு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். பாருங்கள்.

****

நாயகனுக்கு அடுத்த நாள் வரவேற்பு. அதற்கு அடுத்த நாள் திருமணம்.  நாயகனும், நாயகியும் காதலித்து, போராடி, இரு குடும்பத்தாரின் சம்மதம் வாங்கியிருக்கிறார்கள்.  முதல் நாள் நண்பர்கள் மூவருடன் நாயகன் கிரிக்கெட் விளையாட போகிறார். பந்தை பிடிக்க முயலும் பொழுது, கீழே தவறி விழுகிறார். இதனால் ஒராண்டு நினைவுகள் மறந்துவிடுகின்றன.  இதில் முக்கியமான விசயம் காதலித்த விசயத்தையே மறந்துவிடுகிறார். சமீபத்தில் நடந்ததை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

தங்களால் தான் இப்படி நடந்துவிட்டது என குற்ற உணர்ச்சியுடன்,   குடும்பத்தினர் யாரிடமும் சொல்லாமல், 48 மணி நேரத்தில் திருமண வரவேற்பையும், திருமணத்தையும் பல போராட்டங்களுக்கு பிறகு நடத்தி முடிக்கிறார்கள். இறுதியில் தொலைந்து போன நினைவுகள் திரும்பி வந்தனவா என்பது இறுதிக்காட்சி.

****

படத்தின் துவக்கத்தில் நாயகனின் புலம்பல் மனநிலையை பல நண்பர்கள் வாயிலாக உணர்ந்திருக்கிறேன்.  ஏற்பாடு திருமணம் என்றால், சடங்குகள், சீர்வரிசை என எல்லாவற்றையும் இரண்டு குடும்பங்களோ, தரகரோ பேசிக்கொள்வார்கள்.  மணமக்களுக்கு இருக்கும் ஒரே வேலை இருவரும் பல மணிநேரம் போனில் பேசிக்கொள்வது தான்! 

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு நேர்ந்த உண்மை கதையை எடுத்திருப்பதால் சினிமாத்தனங்கள் எதுவும் இல்லை. அனைத்துக் காட்சிகளும் இயல்பாக இருக்கிறது.  உண்மைக்கதைகளை படமாக்கினால் கிடைக்கும் பலன் இது!

****

பச்சி (பச்சியப்பன்) எம்.ஆர். ஐ ஸ்கேனில் என்ன தெரியும் என்ற கேள்விக்கு பக்ஸ் (பகவதி) விளக்கி சொல்லும் இடம், காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ், பாலைய்யாவிற்கு திகில் கதை சொல்லும் இடத்திற்கு இணையானது.

****

'காதல், காதலியின் முகம் அடி ஆழத்தில் பதியக்கூடியது. மறக்கவே மறக்காது' என லெக்சர் கொடுக்கிற பக்ஸ், நாயகன் (மேக்கப் அள்ளிப்போட்டு மணப்பெண்ணாய்) நிற்கும் நாயகியை பார்த்ததும் "யப்பா! யாராட இந்த பொண்ணு?  பேய் மாதிரி இருக்கு!" என சொல்வது நகைச்சுவை.  'லைலாவின் அழகை ரசிக்க வேண்டுமென்றால், மஜ்னுவின் கண்கள் வழியே பார்க்கவேண்டும்' என்றா வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

****
நாயகனை "நான் சொன்னா கேட்பியா மாட்டியா!" என சரஸ் கேட்பதும், அதற்கு நாயகன் "நீ சொன்னா மாடியிலிருந்து கூட குதிப்பேன்டா" என பதில் சொல்வதும், இந்த ஒரு வார்த்தையை பலமுறை சொல்லி சமாளிப்பதும், பச்சி "அதென்ன நான் சொன்னா கேட்க மாட்டேங்குறான்! நீ சொன்னா கேட்குறான். நீ அவன் உயிரை காப்பாத்திற மாதிரி ஏதோ செய்திருக்கே!  அது என்னான்னு சொல்! என சொன்னதும் "நான் 10 வகுப்பு படிக்கும் பொழுது அவனுக்கு படம் வரைஞ்சு கொடுத்தேன்!" என சொன்னதும், "என்னைய பார்த்தா கேன மாதிரி இருக்கா! அல்லது இவரைப் (பக்ஸ்) பார்த்தா கிறுக்கு மாதிரி இருக்கா" என சொல்வது செம கலகலப்பு.  இறுதியில் நினைவுகள் திரும்பிய பிறகு, சரஸ் ஒரு புன்சிரிப்புடன் "நான் சொன்னா கேட்பியா! மாட்டியா?" என கேட்கும் பொழுது, முன்பு போலவே "நீ சொன்னா மாடியிலிருந்து கூட குதிப்பேன்டா" என சொல்லும் பொழுது, கண் கலங்குவார்கள்.நாமும் கண்கலங்குகிறோம்.

****
படத்தில் நடித்த அனைவருமே இயல்பாக அருமையாக படத்தோடு பொருந்தியிருக்கிறார்கள்.இந்த ஆண்டில் பல பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம், அதல பாதாளத்திற்கு விழ, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஓடுவது ஆரோக்கியமான விசயம். இப்பொழுதே பல திரையரங்களில் தூக்கிவிட்டார்கள்.   பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

****

2 comments:

Prem S said...

நட்பின் பெருமையை சொல்லும் படம் இது கண்டிப்பாக ரசிக்கலாம்

Anonymous said...

உண்மையில் அருமையான கதைக் களம் கொண்ட திரைப்படம். ஆனால் சில காட்சிகள் ஜவ்வுகின்றன, ஒரே டயலாக் ரீப்பிட் ஆவது கடுப்பாக உள்ளது .. மற்றப்படி கதை, நடிப்பு, யதார்த்தமான சினிமா தமிழின் புதிய பரிணாமமே .. !