Tuesday, April 30, 2013

கெளரவம் ‍- அழுத்தமில்லை!

'கெளரவக் கொலை' என்பது தவறான வார்த்தை பயன்பாடு.  'சாதி வெறிக்கொலை' என்பது தான் அர்த்தம் பொதிந்த சரியான வார்த்தை.

இந்தியா முழுவதும் நடக்கும் சாதிவெறிக்கொலைகளை பற்றிய படம் என்பது கெளரவமான விசயம் தான். ஆனால், அழுத்தமில்லாத படமாக வந்திருப்பது தான் பெரிய வருத்தம். :(

*****

கதை எனப்பார்த்தால்...

நாயகன் தன்னுடன் படித்த நண்பனை தேடி  எதைச்சையாய் கிராமத்திற்குள் வருகிறான்.  தலித்தான நண்பன், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போனதாக சொல்கிறார்கள்.

நண்பனின் அப்பா மகனை தேடித்தர கோருகிறார்.  அதற்கான முயற்சிகளில் இறங்கும் பொழுது பல அதிர்ச்சியான தகவல்கள் வருகிறது!

****

இரட்டை குவளை தேநீர் கடை, சாதிக்கலவரம் நடந்த ஊர் என சாதி தீண்டாமையை கடைப்பிடிக்கிற ஊராக காட்டுகிறார்கள்.  படத்தில் ஓர் இடத்தில் நாய்கன் சொல்வார்.  'பாரதிராஜா கிராமம் போல இருக்கும்' என நினைச்சேன் என்பார். இந்த கிராமம் இராதாமோகனின் கிராமமாக இருக்கிறது. அவ்வளவு தான்.

ஆதிக்க சாதி வெறி ‍ தலித் அவலநிலை என்பதை காட்டும்பொழுது மனம் பதறவேண்டாம். காட்சியில் அழுத்தமே இல்லாதது தான் காரணம்.

ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ராதாமோகன் தலித்துகளின் நிலை பார்த்து 'அச்சச்சோ' என்பதாக பரிதாபப்பட்டு எடுத்த படமாக‌ இருக்கிறது.

வழக்கமான பாடல், ஆடல் என ஒரு வணிகப்படத்திற்கான எல்லா அம்சங்களும் இருக்கின்றன. ஆபாசம் இல்லை. அது ஒன்று தான் வித்தியாசம்.

பாடல்கள் சுமார். பாடல்களை எடுத்துவிட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது.  நாயகன் பாத்திரத்திற்கு பொருத்தமில்லாத நபராக இருக்கிறார். சிலர் நன்றாக செய்திருக்கிறார்கள்.

சென்னையில் சாதி பார்ப்பதில்லை என்பதாக படத்தில் ஒரு வசனம் வருகிறது. இதெல்லாம் நல்லெண்ண கருத்து. என் ஐந்து வருட சென்னை வாழ்வில் இரண்டு சம்பவங்கள் எனக்கே ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நேர்முக தேர்வுக்கு போனபொழுது, அந்த நிர்வாகி என் சாதியை கேட்டார்.  சாதியையும் நான் சொல்லவில்லை. வேலையும் கிடைக்கவில்லை.

என் பாஸின் நண்பர் ஒருவர் (அய்யர்) வீடு கட்டி குடிபுகுந்தார். அலுவலக ஊழியர்களை அழைக்கவில்லை.  பின்னாளில், எங்க பாஸே சொன்னார். அலுவலகத்தில் இரண்டு ஊழியர்கள் தலித்துகள். அதனால் தான் அழைக்கவில்லை என்றார்.

இப்படிப்பட்ட தீண்டாமை கடைப்பிடிக்கும் கிராமங்கள் தமிழகத்தில் 70களில் தான் இருந்ததாக தினமலர் எழுதியிருக்கிறது.  மிகப்பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

என் நினைவிலிருந்து...சாதி வெறியை இயல்பாய், காத்திரமாய் காட்டிய படம் பருத்திவீரன். உணர்வு தளத்தில் 'பாரதி கண்ணம்மா' பேசியிருக்கும்.

சமூகத்தில் மனிதர்களை இழிவுப்படுத்துகிற ஒரு கொடுமையான நிகழ்வை ஒரு அழுத்தமான பதிவாக தர முயலாமல், மேலோட்டமான, அழுத்தமில்லாத படமாக வெளிவந்திருக்கிறது கெளரவம்.

இப்படி படத்தை எடுத்துவிட்டு, "நல்ல படம் எடுத்தோம். மக்கள் ஆதரிக்கவில்லை" என்று வேறு சொல்வார்கள்.  அதைக் கேட்பது தான் கடுப்பாக இருக்கும்.

1 comment:

Gokul said...

I felt the same, Kumaran. It was not a surprise, however. RadhaMohan's 'Payanam' is the benchmark for his intellectual quality.

The film ended as if it was a crime committed in a moment of fury.

Casteic violence and untouchability are so horrifying. We see that in reality these days. But this film actually made all sharp edges blunt. Hated each scene..