Wednesday, July 17, 2013

ஆறாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நாட்டில் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ரவுடி, மக்கள் பணத்தை தின்று தீர்ப்பவன் என எல்லோரும் கோடிக்கணக்கில் செலவழித்து பிறந்தநாள் கொண்டாடும்பொழுது, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் ஒளியில் உலக விசயங்களை சமரசமில்லாமல் எழுதும் வினவு-க்கு பிறந்த நாள் தாராளமாய் கொண்டாடலாம்.

பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப்போய் தான் “வலையுலகமும் நொந்தகுமாரனும்” என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுத துவங்கினேன்.

இந்த நாட்களில் தான் ‘வினவு’ அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.

என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். என்னோட விக்கிபீடியா வினவு தான். ஏதாவது சந்தேகம் வந்தால், வினவில் தான் தேடிப்படிக்கிறேன். ஒருவேளை இல்லையென்றால் தான் வேறு தளத்திற்கு நகர்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வினவின் குழுவில் சில புதியவர்கள் இணைந்துள்ளதை கவனிக்கிறேன். பருண்மையாகவும், ரசனையாகவும் எழுதுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

புதியவர்களை மனதில் கொண்டு, கேள்வி பதில், மார்க்சிய லெனினிய கல்வி குறித்தும் எழுதுங்கள். முன்பெல்லாம் சனிக்கிழமைகளில் கவிதைகள் வெளியிடுவீர்கள். பிறகு நிறுத்திவிட்டீர்கள். அதை மீண்டும் துவங்கி, இளம் கவிஞர்களை எழுத உற்சாகப்படுத்தவேண்டும். முக்கிய கட்டுரைகளுக்கு கார்ட்டூன் இணைக்க வேண்டும். அதை முகப்பில் தெரியும் படி செய்யலாம்.
ம.க.இ.க வெளியீடான ஒலிப்பேழையில் நிறைய பாடல்களை கேட்டிருக்கிறேன். அதிலிருந்து பெற்ற உணர்வுகள் அதிகம். புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த அதில் உள்ள முக்கிய பாடல்களை மாதம் இரண்டு பாடல்கள் என இணைக்கலாம்.

தோழர் மருதையன் எழுதிய கட்டுரைகளை அவ்வப்பொழுது இணைப்பது போல அவருடைய உரைகளை அவ்வப்பொழுது இணைக்கலாம்.
பல பத்திரிக்கைகள் இளைஞர் மலர்,சிறுவர் மலர், பெண்கள் மலர், அறிவியல் மலர் என நடத்துவது போல வினவும் பல்வேறு பிரிவினருக்காக கவனம் கொண்டு கட்டுரைகள் வெளியிடவேண்டும். அதற்காக வினவு குழுவ கட்டுரைகள் எழுதவேண்டும் என்பதில்லை. இணையத்தில் பல்வேறு துறை சார்ந்த நபர்கள் நிறைய எழுதுகிறார்கள். அதிலிருந்து தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

வருங்காலத்தில் வினவு குழுவில் நானும் இணைவதற்காக தான் தப்போ, சரியோ, எத்தனை சொந்த வேலைகள் இருந்தாலும், சமூக ரீதியான விசயங்களை வாரம் ஒரு கட்டுரை என்ற அடிப்படையில் எழுதி வருகிறேன்.
இப்பொழுது கூட சின்ன சின்ன அசைன்மென்ட் ஏதாவது இருந்தால் தாருங்கள். சந்தோசமாய் செய்கிறேன்.

ச‌மூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.

மீண்டும் வாழ்த்துக்களுடன்,
(சந்தோஷ) குமரன்

1 comment:

ராஜி said...

பிறந்த நாளுக்கு வாழ்த்திக்குறேனுங்க கொஞ்சம் ஸ்வீடும், கேக்கும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.